Sunday, June 21, 2015

WhatsApp மூலம் அவதூறு பரப்புபவர்களை கண்காணிக்கும் பணியில் தமிழக சைபர் கிரைம்

'Facebook' நிறுவனத்துடன்  MOU ?


அவதுாறு மற்றும் பீதியைப் பரப்பும், 'WhatsApp' பதிவுகளை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

இணையதளங்களை விட 'WhatsApp' பதிவுகள்  காட்டுத் தீ போல  சில நிமிடங்களில் நாடு முழுவதும் பரவுகின்றன. இதில் தீய நோக்கத்தோடு செய்யப்படும் பதிவுகள் அதிகரித்து வருகின்றன.

சில நாட்களுக்கு முன் சில தொலைபேசி எண்களைக் குறிப்பிட்டு, 'இவை தீவிரவாதிகளின் எண்கள். இதைத் தொடர்பு கொண்டால், குண்டு வைப்பது உள்ளிட்ட வேலைகள் நடக்கும். எனவே, இந்த எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம்' என, பொதுமக்களை எச்சரிப்பதாக, BSNL பெயரில்  'WhatsApp' பதிவு வெளியானது. ஆனால்  இந்த பதிவுக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என BSNL நிறுவனம் தெரிவித்தது.

உள்நோக்கத்தோடு  அவதுாறு பரப்பும் வகையில்  இப்பதிவு உள்ளது என  புகார் எழுந்துள்ளது. எனவே  'WhatsApp' பதிவுகளை  தமிழக சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணிக்கத் துவங்கி உள்ளனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் பிரிவு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:


'WhatsApp பதிவுகள்  ஒரு தொலைபேசி எண்ணிலிருந்து  மற்றொரு எண்ணிற்கு செல்லும் போது, தொலைபேசி எண்ணிற்கு உரியவர்களை, பொறுப்பாக்க முடியும். இதுபோன்ற புகார்கள் மீது  நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.

இரு தொலைபேசி எண்களுக்கு இடையே நடக்கும் வாட்ஸ் ஆப் உரையாடல், தொலைபேசி உரையாடல் போலத் தான் கருதப்படும். ஆனால், 'WhatsApp Groups' மூலம் பரப்பப்படும் பதிவுகள், எங்கிருந்து துவங்கியது என்பதை கண்டுபிடிப்பது சற்று கடினமாக உள்ளது.

குரூப் பதிவின் மூலத்தை, 'WhatsApp' சர்வரில் இருந்தே பெற முடியும். 'WhatsApp' சேவை, 'facebook' நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. இதன் அலுவலகம் அமெரிக்காவில் உள்ளது. எனவே  WhatsApp பதிவின் மூலத்தைப் பெற  பேஸ்புக் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளோம்.  தற்போதைக்கு குரூப் பதிவு குறித்து, வரும் புகார்களை பதிவு செய்து, விசாரணை மட்டும் நடத்தி வருகிறோம்' என அவர் தெரிவித்துள்ளார்.

அவதுாறு பரப்பும் WhatsApp பதிவுகளை செய்வோருக்கு  சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க  அரபு நாடுகளில் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.

சில நாடுகள் WhatsApp பயன்படுத்த தடை விதித்துள்ளது குறிப்பிடத் தக்கது.