Friday, June 19, 2015

‘அனைத்து பள்ளிகளுக்கும் ஒருங்கிணைந்த சட்டம் வகுக்கப்படும் ’ - தமிழக அரசு


முன்னாள் மத்திய அமைச்சர்  ஆர்.வேலு அவர்கள் 2011ல் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார் .  

'மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான விதிமுறைகள்  செல்லாது என அறிவிக்க வேண்டும்.  சென்னை மற்றும் மதுரை பல்கலைக்கழகங்களால் 1976 ஜூன் 1ம் தேதி அன்று அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை தவிர  மற்ற மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை  ரத்து செய்ய வேண்டும்' என்பது அந்த மனுவின் சாரம்.

இதற்கு கல்வி துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இவ்வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய ’முதல் பெஞ்ச்’ முன நேற்று விசாரணைக்கு வந்தது.

பள்ளி கல்வி துறை சார்பில்  இணைச் செயலர் அழகேசன் தாக்கல் செய்த கூடுதல் பதில் மனுவில் 

'கடந்த 1973ல் கொண்டு வரப்பட்ட 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம்'  சட்டப்பூர்வமானது. அனைத்து தனியார் மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான விதிமுறைகள் சட்டப்பூர்வமற்றவை. இவற்றுக்கென ஒருங்கிணைந்த சட்டத்தை வகுக்க,  உயர்மட்டக் குழுவை அமைக்க  அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தச் சட்டம், சமச்சீர் கல்வி சட்டம் மற்றும் இலவச, கட்டாய கல்வி சட்டத்தின் அடிப்படையில் இருக்கும்'  என தெரிவிக்கப் பட்டுள்ளது.