"குழப்பத்தில்" ஆசிரியர்கள்
இன்னும் நான்கு நாட்களில் பள்ளிகள் திறக்க உள்ள
நிலையிலும், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை,
பள்ளிக்கல்வித் துறை வெளியிடாததால், ஆசிரியர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.
அனைத்து வகை அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இவ்வாறு நடக்கும் கலந்தாய்வில் ஆசிரியர்கள் பங்கேற்று தாங்கள் விரும்பும் பள்ளிகளுக்கு இடமாறுதல் உத்தரவு பெறுவர்.
வழக்கம் போல இந்த ஆண்டும் காலியாக உள்ள இடங்களுக்கு பணியிட மாறுதல் பெற
ஆசிரியர்கள் எதிர்பார்ப்போடு இருந்தனர். ஆனால் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள
நிலையிலும், கலந்தாய்வு அட்டவணையை, பள்ளிக்கல்வித் துறை அறிவிக்காதது,
ஆசிரியர் மத்தியில், விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டில்
தாமதமாக, ஜூன், ஜூலை மாதங்களில், கலந்தாய்வு நடந்தது. இதனால், பள்ளி வேலை
நாளில், ஆசிரியர்கள் பலர் விடுமுறை எடுத்து, கலந்தாய்வில் பங்கேற்றனர்.
இன்னும் நான்கு நாளில், பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இதுவரை, ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
கோடை விடுமுறையில் கலந்தாய்வு நடத்தியிருந்தால், இடமாறுதல் பெற்ற
ஆசிரியர்கள், ஜூன் 1ம் தேதியே, சம்பந்தப்பட்ட புதிய பள்ளிகளுக்கு சென்று
பணியில் சேர்வர். குடும்பத்தை, மாற்றுவதற்கும் வசதியாக இருந்திருக்கும்.
பள்ளி துவங்கிய பின் கலந்தாய்வு நடத்தினால், ஒரு பள்ளியில், ஒரு மாதம்
பாடம் நடத்திய பின், அந்த ஆசிரியர், வேறு பள்ளிக்கு இடமாறிச் செல்வர். அதே
பாடத்துக்கு, வேறு ஒரு ஆசிரியர் வருவதால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் படிப்பு
பாதிக்கும்.
பள்ளி திறந்த பின், வேறு மாவட்டத்துக்கு இடமாறுதல் கிடைத்தால், தங்கள்
குழந்தைகளுக்கு, வேறு பள்ளியில், ’சீட்’ பெற முடியாத நிலையும் ஏற்படும்.
மொத்தத்தில், பள்ளி திறந்த பின் கலந்தாய்வு நடத்தினால், ஆசிரியர்கள், பல
சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் மிகுந்த குழப்ப மனநிலையில் ஆசிரியர்கள் உள்ளனர்.