Thursday, September 15, 2016

நாளை தமிழகத்தில் முழு அடைப்பு: தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் பங்கேற்பு- அரசு பள்ளிகள் இயங்கும்- பெட்ரோல் பங்குகள் நாளை மாலை வரை மூடப்படும்



கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள், வணிகர்கள் வெள்ளிக்கிழமை நடத்தவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழகத்தில் நாளை தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் இயங்காது என தனியார நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலைப் பள்ளி உரிமையாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார்


இதனால் தமிழகம் முழுவதும் 18,000 தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் இயங்காது. நாளைக்கு பதிலாக சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும், நாளை நடைபெற வேண்டிய காலாண்டுத் தேர்வு சனிக்கிழமை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஏற்கெனவே தனியார் பள்ளிகள் வாகன சங்கம் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது

அரசுப் பள்ளிகளில் தேர்வு நடக்கும்:
 
தற்போது பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. முழு அடைப்புப் போராட்டம் காரணமாக 16-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "இதுகுறித்து அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அதனால், திட்ட மிட்டபடி தேர்வு நடக்கும்" என்றார்

பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடல்:
 
காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி நாளை (செப்.16) நடத்தப்படும் பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்படுகின்றன


தமிழகத்தில் உள்ள பெட்ரோல் விற்பனையாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். இது தொடர்பாக தமிழக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் எம்.ஹைதர் அலி கூறுகையில், "சங்க தலைவர் கே.பி.முரளி தலைமையில் நடந்த அவசர நிர்வாக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களையும் 16-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை இயக்குவதில்லை என முடிவெடுக்கப் பட்டுள்ளது" என்றார்.

No comments: