மருத்துவ
பொது நுழைவுத்தேர்வை
தள்ளி வைக்கும் அவசர
சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
அரசு
மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தேசிய அளவிலான
மருத்துவ பொது நுழைவுத்தேர்வு (National Eligibility cum Entrance Test - NEET) மூலம் மட்டுமே நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இதனை தமிழகம் உட்பட 15 மாநிலங்கள் எதிர்த்தன. இதனையடுத்து எழுந்த பல்வேறு அதிருப்தி காரணமாக, மருத்துவ
பொது நுழைவுத்தேர்வை ஒராண்டு தள்ளி வைக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு
வந்தது. இந்த சட்டம் குறித்து ஒப்புதலுக்கு வந்த போது சில விளக்கங்களை
குடியரசுத் தலைவர் கேட்டார். நேற்று மதியம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
ஜே.பி.நட்டா நேரில் சென்று விளக்கமளித்தார்.
அதன் பின், மருத்துவ
பொது நுழைவுத்தேர்வை தள்ளி வைக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசுத்
தலைவர் ஒப்புதல் அளித்து, அதற்கான மசோதாவில் அவர் இன்று கையெழுத்திட்டார்.
இதனையடுத்து,
தமிழக அரசு வழக்கம்போல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வை
நடத்த உள்ளது.
ஆனால், மத்திய அரசுக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் கண்டிப்பாக NEET தேர்வினை எழுத வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.