பாவேந்தர் பாரதிதாசன்
125வது பிறந்த நாள்
(29.04.1891 - 21.04.1964)
பைந்தமிழ்த் தேர்ப் பாகன்; அவனொரு
செந்தமிழ்த் தேனீ; சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு!
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா!
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய ருசியும்
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்.
தமிழுக்கு அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ்இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்.
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ்எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்.
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!