சட்டசபையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சில அறிவிப்புக்களை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது :
அரசு ஊழியர்களின் நலனில் தமிழக அரசு தனி
அக்கறை கொண்டுள்ளது. அரசு ஊழியர்களுக்காக சில சலுகைகளை வழங்க அரசு முடிவு
செய்துள்ளது.அதன்படி,
- குடும்ப நலநிதி திட்டத்தின் மூலம் அரசு ஊழியர் பயன்பெறும் தொகை ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும்.
- குழு காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கும் தொகை ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும்.
- குடும்ப நல உதவி திட்டத்திற்கு அரசு ஊழியர்களிடம் இருந்து ரூ.60 பிடித்தம் செய்யப்படும்.
- சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணப்பயன் ரூ.60,000 ஆக உயர்த்தப்படும்.
- சமையல் உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும் போது பணப்பயன் ரூ.25,000 வழங்கப்படும்.
- சத்துணவு ஊழியர்களின் ஓய்வூதியத் தொகை ரூ.1000 லிருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 86, 831 ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து வல்லுனர் குழு அமைக்கப்படும். வல்லுனர் குழு பரிந்துரையின் பேரில் ஓய்வூதியம் குறித்த தமிழக அரசு முடிவு செய்யும்.
- கருணை அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டுள்ளவர்கள் பணி வரன்முறை செய்யப்படுவார்கள்.
- அரசு மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர்கள் 157 பேர் பேராசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்படுவர்.
- கவுரவ விரிவுரையாளர் ஊதியம் ரூ.10,000லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்படும்.
- 605 கிராம சுகாதாரத்துறை செவிலியர்கள் துறை சுகாதார செவிலியர்களாக பதவி உயர்வு பெறுவர்.
- அரசு அலுவலர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மீண்டும் நிர்வாகத் தீர்ப்பாயம் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார்.