Tuesday, August 23, 2016

மேல்நிலைத் துணைத்தேர்வு - ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு ( October Private Exam for XII - Online Application, Centre, Time Table Announced)

 

மேல்நிலைத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் 24.08.2016  முதல்    (25.08.2016 மற்றும் 28.08.2016 ஆகிய விடுமுறை நாட்கள் தவிர்த்து )  31.08.2016  மாலை 5.45 வரை தங்களின் விண்ணப்பங்களை, தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நோடல் மையங்களுக்கு சென்று பதிவு செய்யலாம். 

யார் விண்ணப்பிக்கலாம்? 
  • ஏற்கனவே நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில்  தேர்ச்சி பெறாத தேர்வர்கள், தாங்கள் தோல்வி அடைந்த பாடங்களை தேர்வு செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம். இவர்கள் H வகையினர் 
  • பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு இடைவெளியும், 16 1/2 வயதும் பூர்த்தி அடைந்தவர்கள்  நேரடித் தனித்தேர்வர்களாக இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் HP வகையினர். 
பாடத்திட்டம் 

நேரடித் தனித்தேர்வர்கள் (HP) 

முதன்முதலாக மேல்நிலைத் தேர்வெழுதும் HP வகை நேரடித் தனித்தேர்வர்கள், பகுதி I மற்றும் II மொழிப் பாடங்களுடன் பின்வரும் ஐந்து பாடத் தொகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். 
 
பாடத் தொகுப்பு எண்
பகுதி 3 பாடங்கள்
304
வரலாறு,பொருளியல்,வணிகவியல்,கணக்குப் பதிவியல்
305
பொருளியல்,அரசியல் அறிவியல்,வணிகவியல், கணக்குப் பதிவியல்
306
பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், இந்தியக் கலாச்சாரம்
307
பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், சிறப்பு மொழி (தமிழ்)
308
பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், வணிகக் கணிதம்

அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் 

ஆண் தனித்தேர்வர்களும், பெண் தனித்தேர்வர்களும் தங்களது விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவு செய்திட கல்வி மாவட்ட வாரியாக தனித்தனியே சேவை மையங்கள் (Service centres) அமைக்கப்பட்டுள்ளன. தனித்தேர்வர்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்


தேர்வுக் கட்டணம் 

மறுமுறை தேர்வெழுதுவோர் (H வகை தனித்தேர்வர்கள்) 
  • ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50/- வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ35/-ம் செலுத்த வேண்டும். 
  • ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/- 
நேரடித் தனித்தேர்வர்கள் (HP வகை தனித்தேர்வர்கள்) 
  • தேர்வுக் கட்டணம் ரூ.150/- இதரக் கட்டணம் ரூ.35/- கேட்டல்/பேசுதல் திறன் தேர்வு ரூ.2/- மொத்தம் ரூ.187/- 
  • ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/- 
  • தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணத்தினை பணமாக செலுத்த வேண்டும். 
மாற்றுத் திறனாளிகள் கவனத்திற்கு

  1. பார்வையற்றோருக்கு மேற்குறிப்பிட்ட தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. 
  2. மாற்றுத் திறனாளிகள், டிஸ்லெக்சியா, நரம்பியல் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள், தேர்வெழுதும் போது சொல்வதை எழுதுபவர், கூடுதல் ஒரு மணி நேரம் ஆகிய குறிப்பிட்ட சலுகைகளை பெற விரும்பினால் உரிய மருத்துவச் சான்றிதழ்களை இணைத்து தனியே ஒரு சலுகை கோரும் கடிதத்தை தமது விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 
விண்ணப்ப எண்ணின் முக்கியத்துவம்

ஆன்-லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை (Application Number) பயன்படுத்தியே அரசுத் தேர்வுத் துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதால், ஒப்புகைச் சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். 

தேர்வு மையம்

தனித்தேர்வர்கள் அவரவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திலேயே தேர்வு எழுத வேண்டும். 
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்.
 
H வகையினர் 
  • உரிய தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணத்தினை சேவை மையங்களில் (Service Centre) பணமாகச் செலுத்த வேண்டும். 
  • மதிப்பெண் சான்றிதழ் ஒளிநகல் (இதுவரை எழுதிய மேல்நிலைத் தேர்வுகளுக்கானது).ஜூன் 2016 பருவத்தில் தேர்வெழுதியோர் தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலினை இணைக்க வேண்டும். 
  • பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பெற்ற தகுதிச் சான்றிதழ் (பள்ளி மாணவராக பதிவு செய்யப்பட்டு தேர்வெழுதாதவர்களுக்கு மட்டும்). 
  • செய்முறை மதிப்பெண்களுக்கான ஆவணம் (செய்முறை அடங்கிய பாடங்களைத் தேர்வெழுதுவோர் மட்டும்) 
HP வகையினர் 
  • உரிய தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணத்தினை சேவை மையங்களில் (Service Center) பணமாகச் செலுத்த வேண்டும். 
  • பத்தாம் வகுப்பு அல்லது சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ். 
  • பள்ளி மாற்றுச் சான்றிதழின் அசல் 
  • இடப்பெயர்வு சான்றிதழ் அசல் (வெளி மாநிலத் தேர்வர்கள் மட்டும்) 
மேற் குறிப்பிட்டுள்ள இணைப்புகளுடன் பெறப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். 

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரை தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுத வழங்கப்படும் அனுமதி தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 

மேலும் மேற் குறிப்பிட்டுள்ள தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 14.09.2016 மற்றும் 15.09.2016 ஆகிய தேதிகளில் சிறப்பு அனுமதி திட்டத்தின் (Takkal) மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்படுகிறது.

No comments: